
சென்னை: மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிரடியாக குறைத்த நிலையில் இது ‛இந்தியா’ கூட்டணியை பாதிக்குமா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலால் மக்களுக்கு அடுத்த ஜாக்பாட் அடிக்கும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் மும்பையில் நடைபெற உள்ளது
இந்த ஆலோசனை கூட்டத்தில் ‛இந்தியா’ கூட்டணியின் சிம்பள் வெளியிடப்படுவதோடு, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இருப்பது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் மத்திய அரசு சார்பில் ரக் ஷா பந்தனையயொட்டி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படும் நிலையில் மேலும் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறைந்துள்ளது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதோடு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தற்போது விவாதமாகி உள்ளது.
