
படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன் எடுத்துக் கொண்டால் ரோட்டில் இறந்து கிடக்கும் புறாவுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுத்து காப்பாற்றி பறக்க விடும் நாயகன். இன்னொரு புறம், தன் வீட்டில் பொறியில் சிக்கிய எலியைக் கூட எரித்துக் கொல்லும் வில்லன். இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பொதுவான பின்னணி.
கடலூரில் ஒரு வழக்கில் இருந்து தப்பிக்க தனது உயர் அதிகாரியை கொலை செய்துவிட்டு அதனை மறைத்து கொடைக்கானலுக்கு மாற்றலாகி வருகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரசுராஜ் (சுஜித் சங்கர்). அதே கொடைக்கானலில் சித்த மருத்துவராக இருக்கும் சதாசிவ பாண்டியன் (அர்ஜுன் தாஸ்), யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், இயற்கையை நேசிக்கும் மனம் கொண்டவர்.
தன் சொந்த பிரச்சினை காரணமாக ஐடி வேலையை விட்டு கொடைக்கானலில் உள்ள ஒரு ஹோட்டலில் மேனேஜராக வேலைக்கு வரும் சூர்யா (தன்யா ரவிச்சந்திரன்), சதாசிவன் இருவரும் காதலில் விழுகின்றனர். உளவியல் சிக்கல் கொண்ட பரசுராஜ், இருவரது காதலையும் பிரிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களை மேற்கொள்கிறார். பரசுராஜின் உள்நோக்கத்துக்கான பின்னணி என்ன? சிக்கல்களிலிருந்து நாயகன், நாயகி இருவரும் மீண்டார்களா? – இதுவே ‘ரசவாதி’ சொல்லும் திரைக்கதை.
