சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அழுகியதாகவும் இதனால் கையை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குழந்தையின் தாய் புகார் கூறிய நிலையில் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. குறை பிரவசத்தில் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு தலையில் ரத்த கசிவு மற்றும் நீர் கசிவு உள்ளிட்ட சில பாதிப்புகள் இருந்தது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி குழந்தையின் வலது கை அழுக தொடங்கியது
குழந்தையின் கையில் ட்ரிப் போடும் போது ஏற்பட்ட கவன குறைவே இதற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் கூறினர். வலது கை அழுகிய நிலையில், குழந்தையின் உயிரை காப்பதற்காக அழுகிய கையை இன்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். குழந்தையின் வலது கை அகற்றப்படுவதற்கு செவிலியர்களின் அலட்சியம் மற்றும் தவறான சிகிச்சையே காரணம் என குழந்தையின் தாய் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், அந்த குழந்தைக்கு தீவிர hydrocephalus எனும் மூளையில் நீர் கசியும் கோளாறு இருந்தது. நீர் கசிவை உறிஞ்ச 5 மாதத்தில் குழந்தைக்கு VP Shunt பொருத்தப்பட்டது. அது வெளியே வந்ததால் அறுவை சிகிச்சை சேய்து அகற்றப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன்பாக புதிதாக VP Shunt பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தையின் வலது கையில் ரத்த உறைவு ஏற்பட்டது.
சரி செய்ய முயற்சிகள் எடுத்த போது வலது கை முழுவதும் பரவியதால் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு நிபுணர்கள் கொண்ட மருத்துவ குழு, எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தது. அறுவை சிகிசைக்கு பின் குழந்தை தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. மருத்துவத்துறை அமைச்சர் உத்தரவுப்படி விசரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழு அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும்
