“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

google.com, pub-6754939224784613, DIRECT, f08c47fec0942fa0

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில்..

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,

முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.

சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,

இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்‌ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகை ஆனந்தா பேசியதாவது..,

சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.

நடிகை அனிஷ்மா பேசியதாவது..,

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார். நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின், மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம். என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,

சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு My name is Khan, I am not a terrorist என சொன்ன
ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்‌ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்‌ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றியது. அவர் உதவியாளர் என்றவுடன் மகிழ்ச்சி. வெற்றிமாறனைத் தாண்டி மனித உணர்வுகளைச் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். தமிழின் முக்கியமான இயக்குநராக வந்துவிடுவார். அக்‌ஷய் எப்படி இப்படி ஒரு ரோல் செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. மிக அற்புதமாக நடித்துள்ளார். முஸ்லீம் பெயரை இந்திய ஒருமைப்பாட்டை அழகாகப் பேசும் படைப்பாக இந்தப்படம் இருக்கிறது. இந்தப்படத்தை யாரும் விளம்பரப் படுத்த தேவையில்லை கண்டிப்பாக வெற்றி பெறும், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…,

ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும், அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார். அக்‌ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,

சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது..,

மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து, உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்‌ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தில் மிகவும் எதார்த்தமாகப் புதிதாக நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான் சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர் நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில், தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம் எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர் வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்‌ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post 45 – திரைப்பட முன் வெளியீட்டு விழா!!
Close
%d bloggers like this: