
திரைவிமர்சனம் : திருக்குறள் !
உலகம் போற்றும் ஒரு தமிழ் காவியமாக திகழ்பவர் திருவள்ளுவர். அவர் இயற்றிய 1330 திருக்குறள்களும் இன்றுவரை உலகப் பொதுமறையாக திகழ்ந்து வருகிறது. அவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை செம்பூர்.கே.ஜெயராஜ் அவர்கள் கதை திரைக்கதை மற்றும் வசனம் எழுதி A.J.பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். உலகப் பொதுமறையை மதுரை தமிழ் சங்கம் எப்படி ஏற்றுக் கொண்டது.? படத்தில் தொடங்கிய போரின் முடிவென்ன.?? படைத்தலைவனாக வரும் பரிதியின் காதல் என்னவானது.? என்பதே படத்தின் மீதிக் கதை. திருவள்ளுவராக கலைச்சோழன் இயல்பு மாறாமல், உடல் மொழியில் தத்ரூபமாக அவரை அடையாளப்படுத்தியிருக்கிறார். அவரது தமிழ் உச்சரிப்பை கேட்பதற்கே அவ்வளவு இனிதாக இருக்கிறது.

மனைவி வாசுகியாக நடித்திருந்த தனலட்சுமி அழகிய தமிழ் முகமாய், காட்சிகளில் அவ்வளவு சாந்தமாக தெரிந்து தனது கதாபாத்திரத்தை நிவர்த்தி செய்திருக்கிறார். பரிதியாக நடித்த குணாபாபு மற்றும் அவரது காதலி பவளக்கொடியாக நடித்த பாடினி குமார் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் அவ்வளவு தெளிவான வசனங்கள் மூலம் தமிழை நம்மில் கடத்துவது அழகு தான்.
படத்தின் மிகப்பெரும் பலமே, தமிழை அவ்வளவு அழகாக உச்சரித்தது தான். இளையராஜாவின் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமை கொடுத்தது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசையும் கதையோடு நாமும் பயணம் புரிய வைத்தது.
