
திரை விமர்சனம் : குபேரா தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் குபேரா. ஏதும் அறியா யாசகர் வாழ்க்கை, அதிலிருந்து பணக்கார வேடம் தரிக்கும் நாள்கள், வஞ்சிக்கப்பட்டு மீண்டும் வீதிக்கும் வரும் அவலத் தருணம் என வீரியமான கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கி ஒவ்வொரு ப்ரேமிலும் அழுத்தந்திருத்தமாக அமர்கிறார் தனுஷ். முக்கியமாக, பணக்காரராக நடிக்கும் இடங்களில் உடல்மொழி, பேச்சு என நுணுக்கமான நடிப்பைக் கொடுத்து படத்திற்கு வலுசேர்க்கிறார். குற்றவுணர்ச்சியோடு பரிதவிக்கும் நேர்மையான அதிகாரியாகவும், குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் இடங்களில் கணவனாகவும் ஆர்ப்பாட்டமில்லாத முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார் நாகர்ஜுனா. தன் அப்பாவித்தனத்தால் தேவையான காட்சிகளில் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மிகப்பெரிய தொழிலதிபராக வரும் நீரஜ் முதல் காட்சியிலேயே இந்தியாவுக்கு எண்ணெய் வளம் கிடைப்பதை தெரிந்துக் கொள்கிறார். அதை மக்களுக்கு தெரிவிக்காத வகையில், அரசியல் தலைவரான ஹரிஷ் பெரடியுடன் கூட்டு சதி செய்து, கொள்ளையடிக்கிறார். அதற்காக அரசியல் தலைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பெரிய தொகையை சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தீபக் (நாகார்ஜுனா) மூலம் கொடுக்க திட்டம் போடுகிறார். தீபக் பினாமிகளாக பிச்சைக்காரர்களை வைத்து இந்த டீலை முடித்துக் கொடுக்கிறேன் என வர பணம் கைமாறிய உடனே பிச்சைக்கார்கர்கள் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டப்படுகின்றனர். இதிலிருந்து, தேவா எப்படி தப்பிக்கிறார், கடைசியில் கிளைமேக்ஸில் என்ன ஆகிறது என்கிற பரபரப்பான கதையை குபேரா படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்!
